- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 5 comments and to comment




இன்று தேர்தல் நாள். இன்று தமிழ்நாட்டு மக்கள் நாம் கடந்த ஐந்தாண்டுகளில் ஆற்றிய பணிக்கு மதிப்பெண் அளிக்கின்ற நாள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திமுக அரசின் சாதனைகளை எண்ணிப் பார்த்து மார்க் போடுமாறும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

இன்று தேர்தல் நாள். இன்று தமிழ்நாட்டு மக்கள் நாம் கடந்த ஐந்தாண்டுகளில் ஆற்றிய பணிக்கு மதிப்பெண் அளிக்கின்ற நாள்.
பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவார்கள், ஆனால் மாணவர்கள் ஆசிரியருக்கு மதிப்பெண் போடுவதில்லை. ஆனால் அரசியலில் தங்களை ஆட்சி செய்தவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் முறையாக, ஒழுங்காக, சீராக தேர்வு எழுதினார்களா என்பதைக் கண்ட பொதுமக்கள் அதற்காக மதிப்பெண் அளிக்கின்ற நாள்தான் இன்று.
ஓராண்டு முழுதும் வயலையே சுற்றிச் சுற்றி வந்து, உரமிட்டு, நாற்று நட்டு, களையெடுத்து பயிரை பராமரித்த விவசாயி அதற்கான அறுவடையைச் செய்து “கண்டு முதல்” செய்கின்ற நாள்தான் இன்று.

ஆண்களை மிஞ்சிய பெண்களின் வரவேற்பு

கடந்த ஐந்தாண்டுகளில் நாம் எந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்திருக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் நமக்குப் பெருமையாகத்தான் இருக்கின்றது. ஆட்சியில் இருந்தபோது என்ன செய்து கிழித்தார்கள் என்று நம்மைப் பார்த்து யாரும் கேட்க முடியாது. வாக்குகேட்டுச் சென்று மக்களைப் பார்த்தபோது அவர்கள் யாரும் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. ஆண்களை மிஞ்சும் வகையில் இந்த முறை தாய்மார்கள் நம்மை வரவேற்ற காட்சி நினைத்து நினைத்துப் பெருமிதம் கொள்கின்ற அளவிற்குத்தான் இருந்தது.

கடலூரில் திரண்ட மாபெரும் மக்கள் சமுத்திரத்தைச் சந்தித்துவிட்டு, இரவே சிதம்பரம் வந்து தூக்கம் என்ற பெயரால் ஒரு சில மணி நேரம் படுத்துப் புரண்டுவிட்டு, மறுநாள் காலையில் நான் போட்டியிடும் திருவாரூர் நோக்கி எங்கள் “வேன்” புறப்பட்டது. கொள்ளிடத்திற்கும் சீர்காழிக்கும் இடையே ஒரு கிராமத்தில் மக்கள் வழிமறித்து வரவேற்றார்கள். ஒரு சிறுமி! பத்து வயதுதான் இருக்கும். கறு நிறம்! கையிலே ஒரு சால்வை. கூட்டத்திற்குள் புகுந்து வேன் அருகே எப்படி வந்தாள் என்றே தெரியவில்லை.

‘ஆறாவது முறையும் முதல்வராவீர்கள் தாத்தா’

வேனின் கண்ணாடி வழியாக தன் முகத்தை நீட்டி “தாத்தா! ஆறாவது முறையாக நீங்கள் வெற்றி பெற்று இந்த வழியாக வருவீர்கள்! அப்போதும் நான் உங்களுக்கு இதே இடத்தில் சால்வை அணிவிப்பேன்” என்று கணீர் குரலில் கூறியபோது அந்த வண்டியிலே இருந்த எங்கள் அனைவருக்கும் மெய் சிலிர்த்தது. அந்த மழலை இன்னமும் என் கண்களை விட்டு நீங்கவில்லை.
மேலும் பத்து கல் அந்தப் பெண்ணைப் பற்றியே பேசிக்கொண்டு மக்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டே சென்றபோது மயிலாடுதுறை அருகிலே ஒரு கிராமம். சாலையோரத்தில் மீண்டும் வேன் நின்றபோது, அந்தக் கூட்டத்தில் ஒரு பெரியவர் தன் பேரனுடன் நின்று கொண்டிருந்தார். மற்றவர்கள் எல்லாம் போட்டிபோட்டுக் கொண்டு சால்வைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெரியவர் என்னிடம் “அய்யா, கடந்த ஆண்டு 75 ஆயிரம் ரூபாய் நீங்க கொடுத்த அரசு நிதியாலத்தான் இதோ என் பேரன் ஆப்பரேஷன் செய்யப்பட்டு இன்றளவும் உயிரோட இருக்கான். உங்களையும் பாக்கிறான். நீங்க நன்றாக இருக்கணும்” என்று வாழ்த்திய போது, அதைவிடப் பெரு மகிழ்ச்சிக்குரிய ஒன்று இருக்க முடியுமா?

மக்கள் கடலில் நீந்திச் சென்றேன்

இந்தச் சுற்றுப் பயணத்தின் இதுபோன்ற காட்சிகள் பல! நேற்று தேர்தல் பிரச்சார கடைசி நாள் அல்லவா? தம்பி டி.ஆர்.பாலுவும், திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனும், திருவாரூரில் எனக்காகத் தேர்தல் பணியாற்றிய தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் செயலாளர் தம்பி சண்முகமும், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதியும் அமர்ந்து நான் மூன்று நாள் பயணம் செய்ய வேண்டியதை ஒரே நாளில் வகுத்துக்கொண்டு என்னை அழைத்துச் சென்றார்கள். அவர்கள் எதிர்பார்த்ததற்கும் மாறாக வழி நெடுக மக்கள் கடலில் நான் நீந்திச் செல்ல வேண்டி நேரிட்டதால் ஒருசில ஊர்களுக்குச் செல்லமுடியாமலே போய்விட்டது.

குறிப்பாக திருவாரூர் தொகுதியிலே உள்ள ஓடாச்சேரி, புத்தூர், ஆமூர், வடகுடி போன்ற கிராமங்களுக்கும், திருவாரூர் நகரிலே உள்ள பல தெருக்களுக்கும் செல்ல முடியாமையால் மாவட்ட செயலாளரை அங்கே சென்று அங்குள்ளவர்களுக்கு சமாதானம் கூறச் சொல்லியிருக்கிறேன்.
இந்த நிலையில் நாம் மதிய உணவுக்காக திருவாரூர் இல்லம் திரும்பி சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக்கொண்டு பொதுக்கூட்ட மேடைக்குச் செல்ல வேண்டுமென்றால் நேரம் இல்லை. எனவே வழியிலே கொரடாச்சேரியில் மாவட்டச் செயலாளரின் சிறிய அலுவலகம் ஒன்று உள்ளது. அங்கே ஏதாவது மதிய உணவு அருந்திவிட்டு, பயணத்தைத் தொடரலாம் என்று தயங்கித் தயங்கி பூண்டி கலைவாணன் கேட்டார்.

வலியின் கொடுமையை மறைத்துக் கொண்டு..!

அவர் தயக்கத்திற்குக் காரணம் என்னுடைய உடல் நிலைதான். கடந்த ஆண்டுதான் என்னுடைய முதுகிலே மிகப்பெரிய அறுவை சிகிச்சை நடைபெற்றது என்பதை நீ அறிவாய். என்னுடைய வயது 87 என்பதும் உனக்குத் தெரியும். அந்த அறுவை சிகிச்சை செய்து கொண்ட இடத்தில் அவ்வப்போது எனக்கு எப்படிப்பட்ட வலி எடுக்கிறது என்பதை என்னுடன் இருப்பவர்கள்தான் அறிவார்கள். சில நேரங்களில் வாய்விட்டே கத்தி விடுகிறேன்.

இந்த உடம்போடு அந்த தள்ளு வண்டியிலே பயணம். அந்த வண்டியிலே நீ உட்கார்ந்து பார்த்தால்தான் தெரியும்! உடலை அப்படி இப்படி அசைக்க முடியாது. அதிலே பயணம் செய்யும்போது, எனது வலியின் கொடுமையை மறைத்துக் கொண்டு, மகிழ்ச்சியோடு குரல் கொடுக்கின்ற மக்கள் முன்னால் சிரித்துக் கொண்டே கையை காட்டவேண்டும். ஒரு சிறிய கிராமத்தில் மக்கள் நின்று கொண்டிருப்பார்கள். உடனே என்னோடு பயணம் செய்த முரசொலி செல்வம், என் மகள் செல்வியும் கையைக் காட்டுங்கள் என்று குரல் கொடுப்பார்கள்.

கையோ தூக்க வேண்டுமா என்று பரிதாபமாக என்னைப் பார்த்துக் கேட்கும். இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கையைத் தூக்கி காட்டும்போது அந்த மக்கள் காட்டுகின்ற அன்புப் பொழிவில் அந்த வலி குறையும். அதற்குள் என் பின்னால் அமர்ந்திருக்கும் மனைவி தயாளு “என்னங்க, இந்தப் பக்கம் பாருங்க, எவ்வளவுபேரு கையை காட்டுறாங்க!” என்று கூற – நான் இரண்டு புறமும் மாறி மாறி கையை ஆட்டும்போது தெரியாத வலி, இப்போதுதான் தெரிகிறது!

இந்த நிலையில் கொரடாச்சேரியில் உள்ள மாவட்ட செயலாளரின் சிறிய அலுவலகத்திற்கு நுழைந்து, சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு, கண்கொடுத்த வனிதம், எருக்காட்டூர், கமலாபுரம், குளிக்கரை, அம்மை யப்பன், தண்டலை, விளமல் கிராமங்களில் வாக்குகளைக் கேட்டுவிட்டு, நேராக மேடைக்கு வரவே 4.15 மணி ஆகிவிட்டது.

ஓய்வெடுக்கப் பிறந்தவன் அல்ல

இந்த அளவிற்கு சிரமத்தைத் தாங்கிக் கொள்ளும் எனக்கு ஹெலிகாப்டரிலோ, விமானத்திலோ பறந்துவந்து, ஆங்காங்கு எழுதிக் கொடுத்த பேச்சினை ஒருசில நிமிடங்கள் பார்த்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ள சென்னை சென்றுவிடலாம் என்ற நிலையில்லையே என் செய்வது?

எப்போதுமே மக்களுக்காக உழைக்கின்ற நேரத்தில் நான் என்னுடைய துன்பங்களைப் பெரிதாக கருதியதில்லை. ஏனென்றால் நான் ஓய்வெடுப்பதற்காக பிறந்தவன் அல்லவே! வாக்குகளைக் கேட்பதற்காக மட்டுமே மக்களைச் சந்திப்பவனும் இல்லையே! கடனுக்காக – பதவிக்கு வந்தே ஆக வேண்டுமென்ற வெறியில் மக்களைச் சந்திப்பவர்கள் வேண்டுமானால் – சகலவிதமான ஆடம்பரங்களோடு ஹெலிகாப்டரிலும், விமானத்திலும் வந்து கூட்டத்திலே மட்டுமே மக்களைச் சந்திக்கலாம்.
ஆனால் சாலையோரத்தில் உள்ள மக்களைச் சந்திப்பதையே கடமையாகக்கொண்ட எனக்கு எப்போதும் ஓய்வெடுக்கத் தெரிந்ததில்லையே! என்னுடைய மனைவியரும், பிள்ளைகளும், பெண்களும் ஒருநாள் பயணத்தைக் குறைத்துக்கொண்டு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு பயணம் புறப்படுங்களேன் என்று கேட்பார்கள்.
ஆனால் எனது நிகழ்ச்சி நிரலை வகுத்தவர்களிடம், நான் என்ன, ஒருசில மணி நேரங்களை வீணடித்து விட்டீர்களே, அந்த நேரத்திலும் என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமே என்றுதான் கேட்டிருப்பேனே தவிர – நான் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்ததில்லை. அதனால்தான் அனைவரும் ஆறாவது முறையாக நான் முதல்வராக வரவேண்டுமென்று கூறுகின்றபோது, அது எனக்குப் பதவி அளிப்பதற்காக அல்ல, மக்களுக்கு பணிவிடை செய்ய தகுந்த வேலைக்காரன் நான்தான் என்ற அளவிலே தான் எடுத்துக்கொள்கிறேன் என்று கோவை கூட்டத்திலே தெரிவித்தேன்.

சீர்தூக்கிப் பார்த்து வாக்களியுங்கள்

எதற்கோ ஆரம்பித்து, கடிதம் எப்படி யெப்படியோ நீண்டு கொண்டிருக்கின்றது. இந்த நாள் இரு தரப்பினரும் கடந்த காலத்தில் எப்படியெப்படி நடந்து கொண்டார்கள் என்பதை அனுபவபூர்வமாக எண்ணிப் பாருங்கள். மக்களுக்கு நன்மைகளை, சாதனைகளை, சலுகைகளை செய்த ஆட்சி எது? அதே நேரத்தில் கொடுமைகளை, சித்திரவதைகளை, துன்பங்களைத் தந்த ஆட்சி எது? இரண்டையும் சீர்தூக்கிப் பாருங்கள்! வாக்களிக்கும் முன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

மக்களுக்கு செய்யப்பட்ட சாதனைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் செயல்பட்ட ஆட்சி எது? அவ்வாறு நிறுத்தப்பட்ட சாதனைகளை மக்களுக்கு மீண்டும் அளித்த ஆட்சி எது? 2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே சொன்ன எந்த உறுதி மொழியையும் நிறைவேற்றாத ஆட்சி எது? தேர்தல் அறிக்கையிலே சொன்ன அத்தனை சாதனைகளையும் செய்ததோடு, மேலும் மக்களுக்காக புதிய புதிய சாதனைகளைக் குவித்த ஆட்சி எது? தேர்தல் அறிக்கையிலே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்குவோம் என்று அறிவித்தோம். அதனை நடத்த முடியாத காரியம் என்று அப்போது ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குவோம் என்று கூறி அதனை இன்றளவும் தந்துவரும் ஆட்சி தி.மு.க. ஆட்சி அல்லவா? கொரடாச்சேரியில் நான் பத்து நிமிடம் தங்கியிருந்தபோது, அந்த நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.எம்.வி. நடராசன் என்பவர் என்னைச் சந்தித்து நன்றி கூறினார். எதற்கு நன்றி என்றபோது சட்டையைத் திறந்து காட்டினார்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மார்பிலே போடப்பட்ட கட்டுக்களுடன் வந்திருந்தார். நீங்கள் இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கா விட்டால் இன்றைக்கு நான் இல்லை அய்யா என்று கூறினார். இப்படி ஒவ்வொரு ஊரிலும் உங்களால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்று ஒவ்வொருவரும் கூறியபோது எனக்கு நானே மதிப்பெண் போட்டுக்கொண்டேன். ஆனால் நீங்கள் மதிப்பெண் வழங்க வேண்டிய நாள் இன்று அல்லவா? எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? மதிப்பெண் வழங்கவா? நன்றி, நன்றி,” என்று கூறியுள்ளார் முதல்வர்.


5 Responses so far.

  1. தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அன்போடும் பாசத்தோடும் வாக்களித்து வரும் அனைத்து அன்பு உடன்பிறப்புகளுக்கும் உளப்பூர்வமான நன்றிகள்..!

    உதயசூரியன் உதிக்கட்டும்..!

    மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கட்டும்...!

  2. Anonymous says:

    தக்காளி முரசொலி படிக்கிற மாதிரியே இருக்குயா உன் ப்ளாக் :))))) நான் எதிர் கூடாரம்

  3. Anonymous says:

    கடந்த ஐந்தாண்டுகளில் நாம் எந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்திருக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் நமக்குப் பெருமையாகத்தான் இருக்கின்றது. //////


    ஏன் மச்சி இருக்காது !!! உலகளாவியா ஊழல செய்ததற்கு பெருமையா ...,என்ன வேணுமினாலும் பட்டுகுலாம்

  4. Jabar says:

    நண்பா... வெற்றி நமதே... ஊளையிடும் நரிகள் கொடநாட்டுக்கு ஓடும் நாள் மே 13.....

  5. 1ST LET ME VOTE FOR THIS POST . .
    BE RIGHT BACK . . .